Tamilnadu

“கணவருடன் தகராறு.. மனைவி எடுத்த விபரீத முடிவால் பறிபோன பச்சிளம் குழந்தைகளின் உயிர்” : காரைக்காலில் சோகம்!

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு வட்டத்திற்குட்பட்ட சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஸ்ரீசந்த், விஷ்ணு என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், கணவன் பாலமுருகன் துபாயில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பிரியா திருநள்ளாறு அருகே தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு பிரியா, பாலமுருகனிடம் தொலைப்பேசியில் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரியான விஷம் குடித்துள்ளார். மேலும் விஷத்தைத் தனது இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார்.

பின்னர், இது குறித்து கணவர் பாலமுருகனுக்கு, பிரியா தொலைப்பேசியில் தெரிவித்துள்ளார். உடனே பாலமுருகன் தனது சகோதரருக்கு இது குறித்துத் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து பிரியா மற்றும் குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். பிரியா தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி: ரூ.2.5 கோடியை மீட்டுத்தரக் கோரி சென்னை போலிஸிடம் முறையீடு!