Tamilnadu

மோடி அரசின் பிடியில் ட்விட்டர் நிறுவனம்.. காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கம் - நடந்தது என்ன?

டெல்லியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் குழந்தையை இழந்த பெற்றோரை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் தங்களுக்கு நீதி கிடைக்க துணை இருப்பதாகவும் உறுதியளித்தார். இதனிடையே சிறுமியின் தாயுடன் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், போக்சோ விதிமுறைகளை மீறி, ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார், பெற்றோர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகக் கூறி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி, ராகுல் காந்தி, போக்சோ விதிமுறைகளை மீறிவிட்டதால், ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து சிறுமியின் தாயுடன் இருந்த புகைப்படத்தை நீக்கியது. அதோடு இல்லாமல், அதைத் தொடர்ந்து அவரின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில் ட்விட்டர் விதிகளை மீறியதாகக் கூறி காங்கிஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் ரோஹன் குப்தா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இது இரட்டை நிலைப்பாடு. அழுத்தத்தின் பிடியில், நெருக்கடியில் ட்விட்டர் நிறுவனம் செயல்படுகிறது. இது கொள்கை விதிமுறை மீறலா எனத் தெளிவாகச் சொல்லுங்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மக்களின் குரலாக நாங்கள் இருப்பதை யாரும் தடுக்க முடியாது. ஏற்கெனவ 5 ஆயிரம் தொண்டர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தகுதி பெற்றும் பெண் என்பதால் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுப்பதா? : ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை !