Tamilnadu

“பிரதமர் மோடி வீட்டுக்கு முன்பாக போய் உண்ணாவிரதம் இருங்க” : அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி சூடு!

சிதம்பரம் மாவட்டத்தில் நேற்றைய தினம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரஸில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், பா.ஜ.கவிடம் நெருக்கம் காட்டுவதால் பலரும் அந்த கட்சியில் இருந்து விலகி எங்களுடன் இணைந்து வருகின்றனர்.

மேகதாது அணை விவகாரத்தில் வரைவு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில், பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி வீட்டின் முன்போ, நாடாளுமன்றத்திற்கு முன்போ, நீர்வளத்துறை அமைச்சர் வீட்டிற்கு முன்போ தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யாமல், பொதுமக்களை பா.ஜ.க ஏமாற்ற முயற்சிக்கக் கூடாது. நாடகம் ஆடுவதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மைக்கான தனி பட்ஜெட் அமைப்பதற்கு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து போடப்படும் பட்ஜெட்டால் விவசாயிகளின் பிரச்னை தீரும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கடலை கார்ப்பரேட்டுக்குத் தாரை வார்ப்பதா? - ஒன்றிய அரசின் மீன்வள மசோதாவுக்கு எதிராக மீனவர்கள் போராட்டம் !