Tamilnadu

“நம் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே!” : ATM இயந்திரத்திலேயே வசமாக மாட்டிக்கொண்ட வடமாநில திருடன்!

நாமக்கல் மாவட்டம் அணியாபுரத்தில் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. காவலாளிகள் இல்லாத அந்த ஏ.டி.எம் மையம் வழியாக தினமும் போலிஸார் சென்று ஆய்வு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்தவகையில், நேற்றைய தினம் இரவு ரோந்து பணிக்குச் சென்ற காவல்துறையினர், எ.டி.எம்-ல் இருந்து சத்தம் வருவதை அறிந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஒருநபர் இயந்திரத்திற்குள் இருந்து தலையை தூக்கிப் பார்த்துள்ளான்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார், அவனை வெளியில் வர சொல்லி எச்சரித்தனர். ஆனால், வசமாக உடல் மாட்டிக்கொண்டதால் அங்கே சிக்கிக் கொண்டான். பின்னர் அதில் இருந்து அவரை வெளியே கொண்டு வந்த போலிஸார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், அந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திராய் என்பதும், மோகனூர் அருகே பிரளியில் உள்ள தனியார் கோழித் தீவன ஆலையில் மூட்டைத் தூக்கும் வேலைப் பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் திட்டமிட்டு ஏ.டி.எம் பின்பக்கமாக துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற வடமாநில தொழிலாளியை கைது செய்த போலிஸார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “காசு இல்லனா கீழ இறங்கு.. நடத்துனர் செய்த விபரீதத்தால் கூலி தொழிலாளி பலி” : பீகாரில் நடந்த பயங்கரம்!