Tamilnadu

பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது.. பா.ஜ.க மீது சந்தேகத்தை கிளப்பும் பொதுமக்கள் !

எம்.ஆர்.சாமிநாதன், எம்.ஆர்.கணேஷ் ஆகிய இருவரும் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமாக ஒரு ஹெலிகாப்டர் உள்ளது. மேலும் பால்பண்ணை, அடகு கடை நிதிநிறுவனம், நகை கடை உள்ளவைகள் கும்பகோணத்தில் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கு வெளிநாடுகளில் சொந்தமாக நகைக் கடைகளும், நிதி நிறுவனங்களும் உள்ளதாகவும், மேலும் அவர்களுக்கு சொந்தமாக தங்கச்சுரங்கம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய கும்பகோணம் பகுதி மக்கள் சுமார் 600 கோடிக்கு மேல் அவர்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். கடந்த ஒரு ஆண்டுகளாகவே முறையாக பணம் திருப்பி தராத நிலையில், இவர்களது நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி பல்வேறு நபர்கள் இவர்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

கொரோனோ நோய் பரவியதை காரணம் காட்டிநிதி, நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் வழங்காமல் இருந்து வந்துள்ளனர். பின்னர் இவர்கள் அளித்த காசோலையும் வங்கியில் பணம் இல்லை என திரும்பி வந்ததால், கும்பகோணத்தை சேர்ந்த ஜவஹருல்லா - பைரோஸ் பானு தம்பதிகள் தங்கள் இவர்களுடைய நிதி நிறுவனத்தில் 14 கோடி ரூபாய் பணம் செலுத்தி இருப்பதாகவும், பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுத்ததாக தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் க்கு புகார் அளித்தனர்.

அதனை அடுத்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சாமிநாதன் - கணேஷ் க்கு சொந்தமான கும்பகோணம் பண்ணை வீட்டிலிருந்த 13 சொகுசு கார்களை பறிமுதல் செய்த போலிசார், மேலும் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் 5 ஊழியர்களையும் கைது செய்தவுடன் கணேசனின் மனைவியயையும் கும்பகோணத்தில் கைது செய்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த சாமிநாதன் கணேஷ் இருவரையும் தனிப்படை போலிஸார் தேடி வந்த நிலையில், இன்று புதுக்கோட்டையில் உள்ள பண்ணை வீட்டில் இருவரையும் தனிப்படை போலிஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கார், 18 சூட்கேஸ்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர்களது பால் பண்ணையில் 600க்கு மேற்பட்ட பசுமாடுகளை ஏராளமான ஊழியர்கள் பராமரித்து வந்தனர். அந்த மாடுகளுக்கு தீவனம் இல்லாததால், அரசு சார்பில் தீவனங்கள் வழங்கப்பட்டது.பசுமாடுகளை பார்த்துக்கொள்ளும் ஊழியர்களுக்கு 70 லச்சத்திற்கு மேல் ஊதிய பாக்கி இருப்பதாக புகார் அளித்துள்ளனர்.

முன்னதாக, கும்பகோணம் நீதித்துறை நடுவர் தரணிதர் முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து இருவரும் கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இரண்டு சகோதரர்களும் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாகவும் தஞ்சை வடக்கு மாவட்ட வர்த்தகர் பிரிவு செயலாளராகவும் இருந்தனர். இவர்கள் மீது புகார் எழுந்ததை அடுத்து வர்த்தகர் பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இவர்கள் மோசடி செய்த பணத்தை அக்கட்சிக்கு அதிகளவில் நன்கொடையாக கொடுத்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர். இதனால் பா.ஜ.க முக்கிய நிர்வாகிகளையும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “முதலமைச்சர் முன்னெடுக்கும் வாசிப்பு இயக்கம் உலகெங்கும் பரவட்டும்” : ‘இந்து தமிழ் திசை’ தலையங்கம் !