Tamilnadu

முகம் வெளிறிய OPS-EPS, பதற்றத்தில் வேலுமணி-தங்கமணி, சிக்கலில் விஜயபாஸ்கர் : வெள்ளை அறிக்கையால் கலக்கம்!

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை குறித்து 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடுகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி 2021-2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

முன்னதாக, முந்தைய ஆட்சியின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை ஆகஸ்ட் 9ஆம் தேதி நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட இருக்கிறார்.

அ.தி.மு.கவின் பத்தாண்டு கால ஆட்சியில் உருப்படியாக ஒன்றும் செய்யாமல், ரூ.5.75 லட்சம் கோடி கடன் சுமையை மட்டும் ஏற்றிவைத்துவிட்டு ஆட்சியில் இருந்து அகன்றது அ.தி.மு.க அரசு.

முதலீடு, வேலைவாய்ப்பு, திட்டங்கள் என எவற்றிலும் வெளிப்படைத்தன்மை இன்றி ஊழலே முதன்மை என முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்பட்டதால் தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த முறைகேடுகள், ஊழல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டு கால ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழ்நாட்டின் நிதிநிலைமை எத்தகையை சரிவினை சிதைவினைச் சந்தித்துள்ளது என்பதை 15ஆவது நிதிக்குழுவும், மத்திய ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. சி.ஏ.ஜி.யின் அறிக்கைகளை மூடி மறைத்து வைத்திருந்தது எடப்பாடி அரசு.

தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் இந்தத் தணிக்கை அறிக்கைகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, சென்ற அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் தோல்விகள் பொதுவெளிக்கு வந்துள்ளன.

வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தி.மு.க அரசு வெளியிட இருக்கும் வெள்ளை அறிக்கையின் மூலம் நிதி மேலாண்மையில் அ.தி.மு.க கண்ட தோல்வி முழுமையாக வெளிப்படப் போகிறது.

இதன் காரணமாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஊழலில் திளைத்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Also Read: “10 ஆண்டுகால தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை” - ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடுகிறார் நிதி அமைச்சர்!