Tamilnadu

"கொரோனாவால் தேர்ச்சி பெற்றவர்கள் வேலைக்கு வேண்டாம்" : பிரபல வங்கியின் விளம்பரத்தால் சர்ச்சை!

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்று முதல் 12ஆம் வகுப்பு உரை உள்ள மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமலே மாணவர்கள் தேர்ச்சி என மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அதேபோல், கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இன்னமும் கொரோனா முற்றாக முடியாததால் ஆன்லைன் வழியே பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரையில் தனியார் வங்கியின் கிளை ஒன்றில் விற்பனை மேலாளர் பணியிடத்திற்கு ஆட்கள் தேவை என நாளிதழில் விளம்பரம் அளிக்கப்பட்டிருந்தது. இதில் 2021ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விளம்பரத்திற்குக் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள சூழலில் அவர்களை ஒதுக்கவோ, கல்வித்தரம் குறைவாக இருக்கிறது எனக் கருதுவதோ தவறான அணுகுமுறையாக இருக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இது இந்த விளம்பரம் தொடர்பாக வங்கி நிர்வாகம் விளம்பரம் கொடுத்துள்ளது. இதில் "2021 passed out candidates are 'also' eligible" என குறிப்பிடுவதற்குப் பதிலாக "2021 passed out candidates are 'not' eligible" எனத் தவறுதலாக எழுத்துப்பிழை ஏற்பட்டதாகவும், அது உடனே திருத்தப்பட்டு மீண்டும் சரியாக ஒரு விளம்பரம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Also Read: "6 ஆண்டுகளில் 680 துணை ராணுவப்படை வீரர்கள் தற்கொலை" : அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஒன்றிய அரசு!