Tamilnadu

மேற்கூரையை உடைத்து கல்லா பெட்டியில் கைவைப்பு; தடயத்தை மறைக்க மிளகாய் பொடி தூவி தப்பிய பலே கில்லாடி!

சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் டேவிட். இவர் இந்தப் பகுதியின் வியாபாரி சங்க தலைவராக உள்ளார். இவர் கே.கே.நகர் பகுதியில் கடந்த 43 வருடங்களாக மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர் டேவிட்டின் மளிகை கடையின் மேல் கூரையை உடைத்து கல்லாப் பெட்டியில் உள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இன்று காலை வழக்கம் போல் டேவிட் தன்னுடைய மளிகை கடையை திறப்பதற்காக சென்றபோது கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் உடனடியாக அருகில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தில் புகார் அளித்த பின் போலீசார் விசாரணை நடத்தினார்கள். குறிப்பாக இவருடைய கடையில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால் வெளியில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஒருவர் மட்டும் கொள்ளையடித்து சென்றார்களா அல்லது இரண்டு, மூன்று பேர் வந்து கொள்ளையடித்துச் சென்றார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.