Tamilnadu

'மனைவியை கம்பியால் தாக்கிய கணவன்... இறந்துவிட்டதாக நினைத்து தூக்கிட்டு தற்கொலை' : சென்னையில் பயங்கரம்!

சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி துர்கா. இந்த தம்பதிக்கு மோகன் மற்றும் ஜீவா என்ற மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பெயிண்டர் வேலை செய்யும் குமார் நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி துர்கா கணவருக்கு மீன் குழம்புடன் சாதம் பரிமாறியுள்ளார்.

அப்போது குமார் மனைவியிடம் 'ஆடி கிருத்திகை நாளான இன்று ஏன் மீன் குழம்பு வைத்தாய்' எனக் கூறி தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குமார் வீட்டில் கிடந்த கம்பியை எடுத்து மனைவி கிருத்திகாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். மனைவி இறந்துவிட்டதாக நினைத்து பதற்றமடைந்த குமார் தனது வேஷ்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர், பக்கத்து வீட்டிலிருந்து வந்த குழந்தைகள் தந்தை, தாய் இருந்த நிலையைக் கண்டு அழுதுள்ளனர். குழந்தைகளின் அழுகுரல் கேட்டு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு படுகாயத்துடன் இருந்த துர்காவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். மீன் குழம்பு தகராறில் மனைவி இறந்ததாக நினைத்து கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: டாக்ஸி ஓட்டுநருக்கு “பளார்”... செல்போனை பறித்து உடைத்த பெண் மீது வழக்குப்பதிவு - உண்மையில் நடந்தது என்ன?