Tamilnadu

அ.தி.மு.க ஆட்சியில் டிக்கெட் எடுக்கச் சொன்ன நடத்துனரை தாக்கிய விவகாரம்.. ரூ.25000 இழப்பீடு வழங்க உத்தரவு!

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அரசுப் பேருந்தில் பயணிப்பது தொடர்பாக காவலர்கள் மற்றும் நடத்துனர் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நடத்துனருக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நெல்லையில் இருந்து குமுளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறிய இரண்டு ஆயுதப்படை காவலர்கள் தமிழரசனும், மகேஷும் பயணச்சீட்டு எடுக்காமல் இருந்துள்ளனர்.

அவர்களிடம் வாரண்டை காண்பிக்குமாறு நடத்துநர் ரமேஷ் கேட்டதற்கு ஆத்திரமடைந்த இரண்டு காவலர்களும், போலிஸிடமே வாரண்ட் கேட்கிறாயா என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர்.

இதில் நடத்துனர் ரமேஷின் கண்ணில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. இதையடுத்து காவல்நிலையத்தில் ஆயுதப்படை காவலர்கள் பற்றி நடத்துநர் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது மாநில மனித உரிமை ஆணையம்.

இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற டி.ஜி.பி சைலேந்திரபாபு காவலர்கள் முறையான வாரன்ட் இல்லாமல் தங்கள் சொந்த வேலைக்காக இலவசமாக பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என்று சமீபத்தில் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஓடும் பேருந்தில் காவலர்களால் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துனர் ரமேஷிற்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Also Read: Facebook-ல் பழகி பாலியல் குற்றவாளியை ‘பொறி’ வைத்துப் பிடித்த பெண் போலிஸ்.. குவியும் பாராட்டு!