Tamilnadu

குடியரசு தலைவருக்கு பரிசாக வழங்கிய நூல்கள் இவைதான்... புத்தகங்களால் பாடமெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதையொட்டி, ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் படத் திறப்பு விழா சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வரவேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் சென்றபோது குடியரசுத் தலைவருக்கு 6 புத்தகங்களைப் பரிசாக அளித்தார்.

வள்ளுவரின் திருக்குறள், எழுத்தாளர் நீல பத்மநாபன் எழுதிய தலைமுறைகள், சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல், தி.ஜானகிராமன் எழுதிய செம்பருத்தி, கி.ராஜநாராயணன் எழுதிய கரிசல் கதைகள், ராஜம் கிருஷ்ணன் எழுதிய சூழலில் மிதக்கும் தீபங்கள் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை குடியரசுத் தலைவருக்குப் பரிசாக அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கலைஞர் திருவுருவப் படத் திறப்பின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு Early Writing System எனும் புத்தகத்தைப் பரிசளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது கிராஃபிட்டி எழுத்து முதல் பிராமி எழுத்துக்கள் வரையிலான பயணம் குறித்த நூல்.

அதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய Journey of a civilization புத்தகத்தை பரிசளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும், கலைஞர் திருவுருவப் படத் திறப்பின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கும் தமிழ்நாடு சட்டசபையின் மாதிரி வடிவம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

Also Read: “தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன்; கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்” : மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு!