Tamilnadu

இதுவரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் படங்களைத் திறந்து வைத்தவர்கள்... தலைவர்களுக்குக் கிடைத்த மரியாதை!

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கலைஞரின் திருவுருவப் படத்தைத் திறந்துவைத்துப் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வது பெருமைக்குரிய விஷயம். முத்தமிழறிஞர் கலைஞரின் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதிலும் பெருமை அடைகிறேன்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்த அனைத்து முதல்வர்களும் சட்டப்பேரவையின் மாண்பைக் காப்பாற்றி உள்ளனர். தமிழக சட்டப்பேரவை பல்வேறு சிறப்புமிக்க வரலாற்றுகளை கொண்டது. வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர் கலைஞர்.

அறியாமைக்கும், ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கலைஞர். இந்த அவையில் இன்று கலைஞரின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நீண்ட காலம் தனது பங்களிப்பை அளித்தவர் கலைஞர். மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர்.” என உரையாற்றினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை 16 தலைவர்களின் திருவுருவப் படங்கள் திறக்கப்பட்டுள்ளன. முதன்முதலில் பி.சுப்பராயன் படம் திறக்கப்பட்டது. பின்னர், நாடு சுதந்திரம் அடைந்தபோது ஆட்சியிலிருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் படம் திறக்கப்பட்டது.

மகாத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா, காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத், முகமது இஸ்மாயில், ராமசாமி படையாட்சியார், வ.உ.சி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார். காமராஜரின் திருவுருவப் படத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி திறந்துவைத்தார். தற்போது கலைஞரின் திருவுருவப் படத்தை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை ஜெயலலிதா திறந்துவைத்தார். ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். திருவுருவப் படங்களைத் திறந்து வைத்தவர்களின் வாயிலாகவே தலைவர்களின் மரியாதையும், புகழும் வெளிப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன்; கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்” : மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு!