Tamilnadu

“பா.ஜ.க அரசால் ஜனநாயகத்திற்கு ஆபத்து; இனி அடிக்கடி டெல்லி வருவேன்” : மோடிக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மக்கள் விரோத சட்டங்களை ஏற்படுத்தி மக்களைத் தொடர்ந்து வதைத்து வருகிறது. மோடி ஆட்சியில் பெட்ரோல் டீசல் தொடங்கி பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து மக்களை துயருக்குள்ளாக்கி வருகிறது.

பா.ஜ.க ஆட்சியை அகற்றவேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களின் எண்ணமாகவும் இருக்கிறது. இதற்காக நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துவருகின்றன.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க இப்போதே வியூகம் வகுக்க வேண்டும் என்று கூறி வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேசினார்.

ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தி.மு.க எம்.பி., கனிமொழி ஆகியோருடனும், தொலைபேசி வாயிலாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடனும் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “எனது 4 நாள் டெல்லி பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசியுள்ளேன். டெல்லி பயணம் வெற்றி பெற்றதாக கருதுகிறேன். இந்த வெற்றியை தொடர்ந்து நடத்திச் செல்ல வேண்டும். இதற்காக நான் 2 மாதங்களுக்கு ஒரு தடவை டெல்லிக்கு வருவேன்.

அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் ஒன்றுபட்டுச் செயல்படுவோம். தற்போது ஜனநாயகத்துக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தையும் முறியடித்தே தீருவோம்.

விலைவாசி உயர்வு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தியதன் மூலம் 3.7 லட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஒன்றிய அரசு ஈட்டியுள்ளது.

ஒருபுறம் விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் வேலையின்மை பெரும் சவாலாக மாறியுள்ளது. கொரோனா பரவலும் நெருக்கடியை அளித்து வருகிறது. மூன்றாவது அலை வந்தால் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதற்குள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு அரசும், காவல்துறையும் பொறுப்பேற்காது”: பா.ஜ.க முதல்வரின் சர்ச்சை பேச்சு!