Tamilnadu

கீழ்த்தரமாக விமர்சித்த வழக்கு : கிஷோர் கே சாமி மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரைக் கழகம்!

சமூக வலைதளங்களில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக பதிவிட்டு வருபவர் கிஷோர் கே சுவாமி. இவர் சமுக வலைதளங்களில் தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பத்திரிகையாளர்கள் , ஊடகங்கள் மீது அப்பட்டமான அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த ஜூன் 10 ம் தேதி கிஷோர் கே சுவாமியை கைது செய்யகோரி புகார். புகாரின் பேரில் சங்கர் நகர் போலிஸார் கிஷோர் கே சாமி மீது 153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து கிஷோர் கே.சாமியை 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து சைதாபேட்டை சிறையில் கிஷோர் கே சாமி அடைக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். அதன் படி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கிஷோர் கே சுவாமி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து கிஷோர் கே சாமி ஜாமீன் கோரி தாம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்தமனுவை விசாரித்த தாம்பரம் குற்றவளியல் நடுவர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அறிவுரை கழகத்தில் கிஷோர் கே சாமி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த அறிவுரைக்கழகம் கிஷோர் கே சுவாமி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உறுதி செய்தது. இதனால் தற்போது கிஷோர் கே சுவாமி சிறையில் இருந்து வெளிவராத நிலையில் உள்ளார்.

முன்னதாக கடந்தாண்டு ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாக பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை காவல் துறை 29.07.2020 அன்று வழக்கு பதிவு செய்து கைது செய்தது.

இதை தாங்க முடியாத பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி போன்றோர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து கிஷோர் கே சாமியை சில மணி நேரங்களிலேயே விடுதலை செய்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த ஆங்கிலேயர்” : நார்மன் பிரிட்சர் குறித்து சுவாரஸ்ய தகவல் !