Tamilnadu

மோடியால் திருடர்களான இளைஞர்கள்... வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸ் அதிர்ச்சி!

இந்தியா முழுவதும் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயைக் கடந்துவிட்டது. தமிழ்நாட்டிலும் பெட்ரோல் விலை கடந்த மாதமே சதம் அடித்துவிட்டது.

இந்நிலையில் பெட்ரோல் வாங்க பணம் இல்லாததால் இரண்டு இளைஞர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் நேற்று மாலை பல்லாவரம் சுரங்கப்பாதை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கொலை மிரட்டல் விடுத்து அவரின் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து மூர்த்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலிஸார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சியைக் கொண்டு விசாரணை நடத்தினர்.

பின்னர், மூர்த்தியிடம் கொள்ளை அடித்தது பம்மல் பகுதியைச் சேர்ந்த சாம், பிரின்ஸ் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலிஸார் இருவரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களிடம் பெட்ரோல் வாங்கப் பணம் இல்லாததால் செல்போனை கொள்ளையடித்தோம் என்ற அவர்களின் வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

Also Read: “சிறுகச் சிறுக நகையைத் திருடி புதிய கடையைத் திறந்த ஊழியர்” : போலிஸில் அதிர்ச்சி புகார்... நடந்தது என்ன?