Tamilnadu

‘சங்கரா சிவ சங்கரா’ மந்திரம் பாடிய ஆதரவாளர்கள்.. நீதிமன்ற வளாகத்தில் தடுப்பு வேலிகளை உடைத்ததால் பரபரப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலிஸாரால் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மொத்தம் மூன்று போக்சோ வழக்குகள் சிவசங்கர் பாபா மீது உள்ளன. இந்நிலையில், முதல் வழக்கில் சிறையிலிருந்த பாபாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவருக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக பாபாவை காண அவரது ஆதரவாளர்களும் பக்தர்களும் நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்தனர்.

அப்போது அவர்கள் 'சங்கரா சிவ சங்கரா' பாடலை பாடி சிவசங்கர் பாபாவை வணங்கினர். இதனைத் தொடர்ந்து அவர்களை அப்புறப்படுத்திய செங்கல்பட்டு நகர போலிஸார் தடுப்பு வேலிகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த சிவசங்கர் பாபாவைக் காண, தடுப்புகளை உடைத்து கொண்டு பாபாவின் ஆதரவாளர்கள் முன்னேறிச் சென்றனர். இதனால் போலிஸாருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலிஸார் வேனில் ஏற்றி புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Also Read: தமிழ்நாட்டின் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை: காலநிலை மாற்றத்தை உணர்ந்து செயல்பட முதல்வர் அறிவுறுத்தல்!