Tamilnadu

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.. புகார் அளித்தவருக்கு கத்திக்குத்து - பா.ஜ.க கும்பல் அட்டூழியம்!

மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பா.ஜ.க பிரமுகர் மீது போலிஸில் புகார் அளித்த சிறுமியின் தந்தை உட்பட 2 பேரை குற்றவாளியின் மகன்கள் கத்தியால் குத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். பா.ஜ.க ஒன்றிய பொதுச் செயலாளரான இவர், ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட 6 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து அதுபோல் செய்யவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி ஒருவர் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து பா.ஜ.க பிரமுகர் மகாலிங்கத்தை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகாலிங்கம் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளிடம் பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் புகார் அளித்த ஒரு சிறுமியின் தந்தையை நேற்று முன்தினம் இரவு மகாலிங்கத்தின் மகன்கள் ஜவகர், சுதாகர் மற்றும் சிலர் சேர்ந்து, கத்தி மற்றும் கம்பால் தாக்கினர். அதைத் தடுக்க வந்த மற்றொருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.

படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக குத்தாலம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து, ஜவகர், சுதாகர், இளஞ்சேரன், சுரேஷ்குமார், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர்.

Also Read: பெங்களூரு வழக்கறிஞரை மிரட்டி அசிங்கப்பட்ட உத்தர பிரதேச அரசு... பொய்யும் புரட்டும்தான் பா.ஜ.க மாடலா?