Tamilnadu

அதிக வட்டிக்கு கடன்: பணம் வசூலிக்க அரிவாளால் மிரட்டிய அதிமுக பிரமுகர்? கைதான பைனான்சியர்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பெரியாயிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால், இவர் அதே பகுதியில் விநாயகா பைனான்ஸ் நடத்தி வரும் சுபாஷ் என்பவரிடம் 50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அதிமுக பிரமுகரான சுபாஷிடம் கடனுக்கு வட்டியாக மட்டும் 1.50 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோபால் பெற்ற அசல் தொகையான 50 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டும் என சுபாஷ் மிரட்டி தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். இதனையடுத்து கோபால் அங்கு சென்ற போது, சுபாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்த கொண்டு பெரிய அரிவாள் ஒன்றை காட்டி தன்னிடம் பணம் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராவிட்டால் இந்த அரிவாளை கொண்டு அவர்களது கதையை முடித்து விடுவேன் என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன கோபால் அங்கிருந்து புறப்பட்டு அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பெரிய வீச்சரிவாள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து சுபாஷை போலீசார் கைது செய்தனர்.