Tamilnadu

“அ.தி.மு.க ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறையில் ‘மெகா ஊழல் முறைகேடு’ நடந்துள்ளது” : அமைச்சர் பி.மூர்த்தி !

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பத்தாண்டு காலாகபத்திரப் பதிவுத் துறையில் மெகாஊழல் நடைபெற்று வந்துள்ளது. இதனை விசாரித்து நடவடிக்கைஎடுக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தேனி மாவட்ட தனிதாசில்தார் செந்தில் குமார் ரூ.20 லட்சத்திற்கும் மேல் முறைகேடு செய்தது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத்துறையில் அரசு நிர்ணயம் செய்த தொகையினை விட மதிப்புக் குறைத்து பத்திரப் பதிவு செய்தவர்கள் குறித்து வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதன் ஒருபகுதியாக தேனி மாவட்டத்தில் முத்திரை தாள் தனி தாசில்தார் செந்தில் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய 20 லட்சத்து 23 ஆயிரத்து 680 ரூபாய் பணத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தி முறைகேடு செய்துள்ளார். இதனை கண்டறிந்து இரவோடு இரவாக அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதுபோன்று பத்திரப் பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஆள் மாறாட்டம், போலிப்பத்திரப்பதிவு போன்றவையெல்லாம் கண்டறிந்து, அது குறுத்து விசாரணை நடத்தி அதிரடியாக நடவடிக்கை எடுக்கும் படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் அனைத்தும் கடந்த ஆட்சியில் நடந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போது இது போன்ற சம்பங்கள் நடைபெற வாய்ப்பே இல்லை. முன்பெல்லாம் பதினோறு, பனிரெண்டு மணிக்கு அலுவலகத்திற்கு தாமதமாக வரும் அதிகாரிகள் தற்போது சரியாக 10 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து தங்கள் பணியை துவக்குகிறார்கள். பொதுமக்கள் மிகவும் எளிதாக அனுகும் வகையில் பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “அனைத்தையும் செறித்து - வளரும் வல்லமை திராவிட அரசியலுக்கும் ஆட்சியியலுக்கும் உண்டு” : ‘முரசொலி’ புகழாரம்!