Tamilnadu

மேகதாது விவகாரம்: முக்கிய தீர்மானங்களை இயற்றிய முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி - டெல்டா விவசாயிகள்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை தடுக்கும் விதத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக கலந்தாலோசனை மேற்கொள்வதற்காக இன்று சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்றும், சட்டரீதியாக முயற்சிகள் மேற்கொள்வது என்றும் , அனைத்து கட்சி சார்பில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது என்றும் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானத்திற்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பை அளித்துள்ளனர்.

இப்பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வரும் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் , காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டால் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்ற நிலையில் அச்சத்தைப் போக்கி அணையை கட்டாமல் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை உடனடியாக எடுத்த முதல்வர் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளதாக விவசாயிகள் தங்களது பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read: மேகதாது அணை பிரச்சினை : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்!