Tamilnadu

“ஜூலை 12-க்குள் 15.86 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்க ஒன்றிய அரசு உறுதி”: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் உறுதி!

ஜூலை 12-ஆம் தேதிக்குள் 15.86 லட்சம் டோஸ் தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளைச் சந்தித்து தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து ஒன்றிய அரசிடம் எடுத்துரைத்தோம். கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.

தடுப்பூசி உற்பத்தியில் உள்ள சவால்கள், தரச் சான்றிதழ் ஆகியவற்றால் தாமதமாவதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவித்தனர். ஜூலை 12ஆம் தேதிக்குள் 15.86 லட்சம் டோஸ் தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவுப்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளனர். காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்காலிக எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரியுள்ளோம். தமிழ்நாட்டிற்கான கொரோனா நிதியை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் ஒன்றிய அரசு விளக்கம் தந்தது” எனத் தெரிவித்தார்.

Also Read: “அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்