Tamilnadu

வள்ளுவர் கோட்டத்தை பராமரிக்காமல் அதன் மகத்துவத்தை சீர்குலைத்த அதிமுக அரசு - அமைச்சர் சாமிநாதன் சாடல்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தை மறுசீரமைப்பதற்காக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளரை சந்தித்து பேசியதாவது

”கடந்த ஆட்சிக்காலத்தில் அதிசய சின்னமாக போற்றப்படவேண்டிய வள்ளுவர் கோட்டம் உதாசீனப்படுத்தப்பட்டு, அதன் மகத்துவம் சீர்குலைக்கப்பட்டு  பராமரிப்பின்றி இருந்த நிலையில் வள்ளுவர் கோட்டத்தை மறுசீரமைக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது.

வள்ளுவர் கோட்டம் மறுசீரமைப்பதற்க்கான பராமரிப்பு பணிகள் துவங்கி அதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் 15 நாட்களுக்குள் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பதற்கான பணிகள் துவங்கும்.

வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மணி மண்டபங்கள், தலைவர்களின் சிலைகள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் அனைத்தும்  பராமரிப்பதற்கான பணிகள் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

மேலும் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் மணி மண்டபங்கள், தலைவர்களின் சிலைகள் ஆகியவை புதிதாக நிருவுவதற்கான அறிவிப்புகள் வெளியாகும். கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த பிறகு திரையரங்குகளை திறப்பதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.”

எனக் கூறியுள்ளார்.

Also Read: “4 லட்சம் தடுப்பூசிகளை வீணடித்துள்ளது கடந்த அதிமுக அரசு” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!