Tamilnadu

தளர்வுகள் அறிவித்தும் கண்காணிப்பை நிறுத்தாத திமுக அரசு; சென்னையில் 40 இடங்களில் தொடரும் தடுப்பு நடவடிக்கை

தமிழகம் முழுவதும் இன்று முதல் அரசு அறிவித்துள்ள பல்வேறு தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையை பொருத்தவரையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியாளர் விஜயராணி ஆகியோர் தலைமையில் சென்னையில் உள்ள அனைத்து வியாபார சங்க நிர்வாகிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை, நொச்சிக்குப்பம், காசிமேடு, வானகரம் ஆகிய இடங்களில் இயங்கக்கூடிய மீன் மார்க்கெட், கோயம்பேடு, கொத்தவால்சாவடி, ஜாம்பஜார், தி.நகர் போன்ற முக்கியமான மார்க்கெட் பகுதிகள் மற்றும் வணிக வளாகங்களில் மக்கள் அதிக அளவில் கூடி நோய்த்தொற்று எளிதில் பரவக்கூடிய சூழ்நிலை உள்ளதால் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அனைத்து வணிக வளாகங்களில் நுழைவு வாயிலிலும் கூடாரம் அமைக்கப்பட்டு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் முகக் கவசம் கட்டாயம் அணியவும் அரசு அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி மக்கள் அதிகமாக கூட கூடிய இடங்களில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு வட்டங்கள் வரையப்பட்டு சமூக இடைவெளிகள் கடைப்பிடிக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்கள் மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகளில் நுழைவாயில் மற்றும் வெளி வாயில்களில் கூடாரங்கள் அமைத்து உடல் பரிசோதனை செய்யும் கருவி கிருமிநாசினி மற்றும் முக கவசம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு காவல்துறை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் கோபுரங்கள் அமைக்கப்பட்டும் மற்றும் ஒலிபெருக்கியின் மூலமாகவும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் ட்ரோன் கேமரா உதவியுடன் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தலைமையில் கோரோனா நோய்த்தொற்று பரவல் தடுக்கும் விதமாக தன்னார்வலர்களும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மக்கள் அதிகமாகக் கூட கூடிய இடங்களில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட வசனங்கள் அடங்கிய பேனர்களும் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் மக்கள் அதிகமாக கூட கூடிய 40 இடங்களைத் தேர்ந்தெடுத்து சென்னை காவல்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் 2 பிரிவினர்களாக ஆளினர்கள் பணியமர்த்தப்பட்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.

Also Read: 6 வாரங்களுக்குப் பின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கம்... வழிபாட்டுத் தலங்கள் திறப்பு!