Tamilnadu

“சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் கொரோனா 3-வது அலை வராது” : மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பேட்டி!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் இதுவரை 10 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பளவு 3% குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தால்தான் கொரோனா மூன்றாவது அலை வராது. மேலும் வரும் வாரங்களில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தளர்வுகள் அளிக்கப்பட்டுவிட்டது என்பதற்காகப் பொதுமக்கள் கவனக்குறைவின்றி செயல்படக் கூடாது.

அதேபோல், கொரோனா நமக்கு இல்லை என்று எண்ணிவிடக் கூடாது. டெங்குவை எப்படி ஒழித்தோமோ அதைப்போல் கொரோனாவை ஒழிக்கச் செயல்பட வேண்டும். கொரோனா விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக மக்கள் மாற்ற வேண்டும்

கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகளை மறைப்பதாகக் கூறுவது தவறான குற்றச்சாட்டு. கொரோனா மரணங்களைத் தமிழ்நாடு அரசு மறைக்கவில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை.கொரோனா இறப்பை குறைத்து காட்டுவதாக கூறப்படுவது தவறான குற்றச்சாட்டாகும் ” என தெரிவித்துள்ளார்.

Also Read: “எழும் கதிரவன் என்றும் மறைவதில்லை” : கழக அரசு இரவு பகலெனப் பாராது உழைப்பதை புகழ்ந்துரைக்கும் கார்ட்டூன் !