Tamilnadu

ஜூலை 5 முதல் கூடுதல் தளர்வுகள்.. ஊரடங்கு நீட்டிப்பு? : அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 5ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் மே 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் குறையாத நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்ததன் காரணமாக இந்த மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 23 மாவட்டங்களிலும் ஒரு சில தளர்வுகளுடனும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடனும் ஜூலை 7ம் தேதி வரை 6வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், ஜூலை 5ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 7வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு ஊக்கத் தொகை.. ஆசிரியர்களின் முயற்சிக்கு குவியும் பாராட்டு!