Tamilnadu

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி.. குடியிருப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஏழ்மையில் வாடி வரும் பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகைக் குடியிருப்பு மற்றும் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எம்.கே.டி என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திரக் கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர் ஆவார். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழ்நாட்டில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன.

குறிப்பாக, 1944ஆம் ஆண்டு வெளியான 'ஹரிதாஸ்' என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டாராகக் கருதப்பட்டார்.

தமிழ்த் திரையுலகில் மிக பிரபலமாக அக்காலகட்டத்தில் விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில், குடியிருக்க வீடின்றி, மிகவும் சிரமமான சூழ்நிலையில் வசித்து வருவதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சாய்ராம் குடும்பத்தினருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “இலங்கைத் தமிழர்களுக்கு முதல் கட்டமாக 1,000 குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை” - அமைச்சர் மஸ்தான் தகவல்!