Tamilnadu

கொரோனா நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசை பாராட்டிய தலைமை நீதிபதி... தடுப்பூசிக்காக உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கப்பட்டது. இம்முகாமினை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பேசுகையில், "தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது.

கொரோனாவை ஒழிக்க தடுப்பூசியைத் தவிர வேறு மாற்று இல்லை. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று குறைந்தாலும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், "கொரோனா பேரிடர் காலத்தில் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை. தமிழ்நாட்டில் 2 கட்டங்களாக 11 கோடி தடுப்பூசிகள் செலுத்த வேண்டியுள்ளது.

தற்போது வரை 1.41 கோடி தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கோடி தடுப்பூசி மருந்துகளை பெற்றுத்தர சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

சமுதாயத்தில் நடைபெறும் அநியாயங்களைத் தடுக்கும் தடுப்பூசி நீதிபதிகள்தான். நீதிபதிகளும் தங்களுடைய பங்களிப்பாக ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பொற்காலத் தமிழ்நாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்குவார் எனக் கட்டியம் கூறும் ஆளுநர் உரை!