Tamilnadu

நிவாரணம் வழங்குவதிலும் விளம்பரம் தேடும் பாஜக? தூய்மை பணியாளர்களை காக்க வைத்து அனுப்பிய அவலம்!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பாஜக சார்பில் முன்கள பணியாளர்களான துப்புரவு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு நிவாரணங்களை வழங்கினார்,

பாஜக சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 180 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டிருந்த நிலையில் 250க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்,

250 பேருக்கும் நிவாரண பொருட்கள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது. நிவாரண பொருட்கள் வாங்காமல் 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தனியார் திருமண மண்டபத்தில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

மேலும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முகக்கவசம் சமூக இடைவெளியை போன்றவற்றை காற்றில் பறக்கவிட்டு துப்புரவு பணியாளர்கள் கூட்டம் கூட்டமாக நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கு முந்தி அடித்ததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்,

பாஜக சார்பில் வழங்கப்பட்ட நிவாரண நிகழ்ச்சியில் சரியான முறையில் துப்புரவு பணியாளர்களை கணக்கீடு செய்து அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் பணி செய்யாமல் பாதி பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில் நிவாரண பொருட்களை கிடைக்காத துப்புரவு பணியாளர்கள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.