Tamilnadu

மூன்று நாட்களுக்கு சட்டமன்ற கூட்டத்தொடர்.. 24ம் தேதி முதலமைச்சர் உரை : சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 133 சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெற்றி மகுடம் சூடியது தி.மு.க. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், 16 ஆவது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

கொரோனா தொற்று பரவல் சூழலில், கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வரவேற்றார். பின்னர் வணக்கம் எனவும் தமிழ் இனிமையான மொழி எனவும் கூறி உரையை தொடங்கினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

பின்னர், சென்னை கலைவாணர் அரங்கில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, "அனைத்து கட்சி தலைவர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர் என அனைவரும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாளை மற்றும் நாளை மறு நாள் நடைபெறும். 24ம் தேதி முதலமைச்சர் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றுவார்.

மேலும், நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் 11 நபர்களுக்கு இரங்கல் குறிப்புகள், மற்றும் 4 முக்கிய நபர்களான நடிகர் விவேக், கி.ராஜநாராயணன், துளசி அய்யா, டி.எம்.காளியண்ணன் உள்ளிட்டோருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். கேள்வி பதில் நேரம், கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்டவை இந்த கூட்டத்தொடரில் இல்லை. சட்ட முன்வடிவு ஒன்று இரண்டு வரலாம்" என்றார்.

Also Read: “நீங்கள் எதற்கு; நானே வருகிறேன்” : தொழிலாளர் கோரிக்கையை சங்க அலுவலகத்திற்கே வந்து பெற்றுக்கொண்ட அமைச்சர்!