Tamilnadu

பேயை விரட்டுவதாகக் கூறி 7 வயது சிறுவன் அடித்துக்கொலை... ஆரணி அருகே கொடூர சம்பவம்!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி திலகவதி. இந்த தம்பதிக்கு ஏழு வயதில் சபரி என்ற குழந்தை உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கார்த்தி உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து திலகவதி, அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சபரிக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.

பின்னர், நேற்று இரவு திலகவதி மற்றும் அவரது சகோதரிகள் சபரியை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசிக்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளனர். ஆனால், கண்ணமங்கலம் வரை வந்த ஆட்டோ அதன் பிறகு செல்ல முடியாது எனக் கூறி அவர்களை அங்கேயே இறக்கிவிட்டுள்ளது.

இதையடுத்து கண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்த போது, திடீரனெ மூன்று பேரும் சிறுவன் சபரியை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்து சபரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திலகவதி மற்றும் சகோதரிகளிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் சிறுவனுக்குப் பேய் பிடித்ததாகவும் அதனை விரட்டுவதற்கான நாங்கள் தாக்கினோம் என அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து போலிஸார் அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “மேகதாது தடுப்பணை கட்டும் திட்டத்தை தி.மு.க நிச்சயம் தடுக்கும்” : தயாநிதி மாறன் எம்.பி உறுதி!