Tamilnadu

10 ஆண்டு கோரிக்கையை 4 நாட்களில் முடித்துக்கொடுத்த அமைச்சர் முத்துசாமி : குவியும் பாராட்டு!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் உள்ள கோவை - சேலம் செல்லும் நான்கு வழிச்சாலையில், ஈரோடு - சத்தியமங்கலம் செல்லும் முக்கிய சாலையை இணைக்கும் சர்வீஸ் சாலையைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 15 ஆண்டு காலமாகக் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்‌.

இதற்கிடையில், இப்பகுதியில் 45 க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சர்வீஸ் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் தங்கராஜ் மற்றும் சபரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில், இப்பகுதி மக்களின் 10 ஆண்டுக் கால கோரிக்கையை ஏற்று நான்கு நாட்களுக்கு முன்பு 40 லட்சம் மதிப்பீட்டில் சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவிட்டார்.

பின்னர் நான்கே நாட்களில் சாலை சீரமைக்கும் பணிகள் முடிவடைந்து, சித்தோடு சர்வீஸ் சாலை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முன்னதாக, சாலை விபத்தில் உயிரிழந்த தங்கராஜ் மற்றும் சபரி ஆகியோரின் நினைவாக அவர்களின் குடும்பத்தை சேர்ந்த பானுப்பிரியா மற்றும் மகள் காவியா ஆகியோர் அமைச்சர் முத்துசாமியின் தலைமையில் ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரே சாலையை திறந்து வைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணன் உண்ணி வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் ஈரோடு ஒன்றிய செயலாளர் தோப்பு சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Also Read: “வலுவான - வளமான தமிழ்நாட்டை உருவாக்க தி.மு.கழகத்துடன் இணைந்து செயல்படுவோம்” : ராகுல்காந்தி உறுதி !