Tamilnadu

போன வாரம் கோரிக்கை; இந்த வாரம் செயல்படுத்திய உதயநிதி ஸ்டாலின் - பெண் இஸ்திரி தொழிலாளிக்கு இன்ப அதிர்ச்சி!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தொகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த வாரம் தொகுதியில் ஆய்வின்போது இஸ்திரி தொழிலாளி செல்வி (48) என்பவர் பல ஆண்டுகளாக சென்னை திருவல்லிக்கேணி ஜாம் பஜாரில் இஸ்திரி வேலை செய்து வருவதாகவும் தங்களுக்கு என ஒரு இஸ்திரி வண்டி வாங்க பணம் இல்லை எனவே நீங்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை மனு ஒன்றை அளித்து இருந்தார்.

அதன்படி இன்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார்க்கு நேரில் சென்று இஸ்திரி தொழிலாளி செல்வியை தன்னுடைய வாகனத்திலேயே அழைத்து வந்து சென்னை திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய இஸ்திரி வண்டியையும் இஸ்திரி பெட்டியையும் பரிசாக வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, பகுதி செயலாளர்கள் காமராஜ் மற்றும் மதன் மோகன் ஆகியோர் உடனிருந்தார். தன்னுடைய வாகனத்திலேயே அழைத்து வந்து கோரிக்கையை நிறைவேற்றி தந்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜயசாந்தி பில்டர்ஸ் மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் கொரானா பேரிடர் கால நிவாரான பொருட்களாக 700 நபர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மிளகாய் உள்ளிட்ட 18 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் 3000 முக கவசங்களை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியின் போது சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிற்றரசு, விஜயசாந்தி பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் சாந்தன் மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் J. மனோகரன், பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Also Read: "கொரோனாவை ஒழித்த முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!