Tamilnadu

“ஊரடங்கு முடியும் வரை உணவு விநியோகம் தொடரும்” - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

கொரோனா நோய் தடுப்புப்பணியில் திருக்கோயில்கள் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் உணவுப் பொட்டலங்கள் 21.06.2021 வரை தொடர்ந்து வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களது பசியினை போக்கும் விதமாகவும், அரசு மருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 14.06.21 வரை நாள்தோறும் ஒரு இலட்சம் உணவுப் பொட்டலங்கள் திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு மாண்புமிகு முதலமைச்சர் வழிகாட்டுதல் படி, ஆணையிடப்பட்டு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன.

Also Read: "உலகத்திலேயே நீங்கதான் ரியல் ஹீரோ" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பணிகளைப் பாராட்டும் பொதுமக்கள்!

இதற்கான போதிய நிதி வசதி இல்லாத திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும் அன்னதான மைய நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் 14.06.2021 முதல் 21.06.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இக்கால கட்டத்திலும் திருக்கோயில்கள் வாயிலாக 11 மாவட்டங்களின் மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்ட உணவு தேவைப்படும் நபர்களுக்கு 21.06.2021 வரை தொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதனையும், இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும் திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மைய நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதையும் நிறைந்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா நிதியாக தங்கச்சங்கிலி கொடுத்த இளம்பெண் செளமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் சேர்வதற்கான பணி ஆணை!