Tamilnadu

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 14 முதல் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின் பின்னணி என்ன?

அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 14 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு: - “வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணையின்படி, கொரோனா நாடு முழுவதும் பரவலாக இருந்ததன் காரணமாக மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்பட மாட்டாது என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதாகவும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டியுள்ளது.

பள்ளி வளாகம் மற்றும் வகுப்பு அறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 14 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

இதனை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு இந்த விதிமுறைகள்கூட தெரியதா?” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!