Tamilnadu

தூர்வாரும் பணிகள் தீவிரம்: மேட்டூரில் இருந்து கடைமடைக்கு தண்ணீர் செல்ல துரித நடவடிக்கை எடுக்கும் அரசு!

ஜூன் மாதம் 12 ம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்திற்க்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் , தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ 20 கோடி மதிப்பில் ஆறுகள், வாய்க்கால்கள், தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வல்லம் முதலை முத்துவாரியில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் பின்னர் வெண்ணாறு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்தீப் சக்சேனா, “வரும் 12ந் தேதி மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டு இங்கு தண்ணீர் வருவதற்குள் தூர் வாரும் பணிகள்நிறைவு பெரும். பணிகள் நடைபெறும் கிராமத்தில் விவசாயிகளுடன் இணைந்து நேரடியாகவும் வாட்ச்ஆப் செயலி மூலமாகவும் குழு அமைத்து பணிகள் நடைபெறும்.

மேலும் பணிகள் நடைபெறும் இடங்களில், நோட்டீஸ் போர்டு வைத்து, அதில் பணியின் தன்மை, பணி தொடக்கம் மற்றும் முடிவடையும் காலம் ஆகியவற்றை எல்லோருக்கும் தெரியும்படியாக வைக்கப்படும். அந்த பணியில் ஆலோசனை மற்றும் குறைபாடுகள் இருப்பதாக விவசாயிகள் 48 மணி நேரத்திற்குள் தெரிவித்தால் உடனுக்குடன் சரிசெய்யப்படும்.

அதிக அளவிலான இயந்திரங்களை கொண்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கடைமடை வரை தண்ணீர் தடையில்லாமல் செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஒன்றியம் என்ற ஒற்றைச் சொல் - கொந்தளிக்கும் சமஸ்கிருத சவலைப்பிள்ளைகள்” : முரசொலி தலையங்கம் பதிலடி!