Tamilnadu
“விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுக” - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
"மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
“நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த "விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச்சட்டம் 2020”, “வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020”, "அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020” ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் தங்கள் போராட்டத்தைத் துவங்கி இன்றுடன் (26.5.2021) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது.
இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை - உணர்வுகளை மதித்து அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு ஒன்றிய அரசு இதுவரை முன்வரவும் இல்லை - ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை என்பது கவலையளிப்பதாக இருக்கிறது.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், “இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி - இவற்றை ரத்து செய்திட ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும்” என்று தமிழக மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
எனவே, டெல்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாகத் திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!