Tamilnadu

அமெரிக்கா, சீனாவில் இருந்து 52 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் இறக்குமதி: உற்பத்தியை பெருக்குவதில் தீவிரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெருமளவில் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழக அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும், வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் கொண்டு வருவதிலும் போா்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதோடு வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளும் பெருமளவு தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அரசும் அதற்கு தாராள அனுமதியளித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைகள், தனியார் அமைப்புகள் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை அதிகாக இறக்குமதி செய்யத்தொடங்கிவிட்டன.

நேற்று இரவு அமெரிக்கா, சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து சென்னை வந்த 3 சரக்கு விமானங்களில் ஆக்சிஜன் தயாரிக்கும் 52 கருவிகள் சென்னை விமானநிலையத்தில் வந்து இறங்கின.

சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த கருவிகள் அடங்கிய பாா்சல்களுக்கு முன்னுரிமை வழங்கி, உடனடியாக சுங்கச் சோதனைகள் முடித்து டெலிவரி கொடுத்து அனுப்பினர்.

சென்னைக்கு நேற்றிரவு மட்டும் அமெரிக்கா, ஹாங்காங், சீனாவிலிருந்து 52 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் வந்துள்ளன. அடுத்த சில நாட்களில் மேலும் பல கருவிகள் வெளிநாடுகளிலிருந்து வரவிருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: “கொரோனா தடுப்பு பணியில் என்ன தேவையென்றாலும் உடனடியாக தீர்க்கப்படும்” : வருவாய்த்துறை அமைச்சர் உறுதி!