Tamilnadu

“கோவை, தேனி மற்றும் கடலோர மாவட்டங்களில் மே 21 வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்” - வானிலை நிலவரம்!

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த உச்ச உயர் தீவிர புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு அரபிக் கடலுக்கு சென்று நேற்று இரவு டையூவுக்கு 20 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் சௌராஷ்டிரா கரையை கடந்தது. தற்போது சௌராஷ்டிரா பகுதியில் வலுவிழந்து தீவிர புயலாக நிலைகொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நாளை (19.05.2021) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் .

அதேபோலம் 20.05.2021, 21.05.2021 ஆகிய நாட்களில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேலும், 22.05.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூட்டும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

22.05.2021: தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் . மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதியில் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் .

கடல் உயர் அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோரப் பகுதியில் (குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை) 19.05.2021 இரவு 11.30 வரை கடல் அலை 1.5 முதல் 2.5 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .