Tamilnadu

மே 10ஆம் தேதி கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: 5 நாளில் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு அனுப்பிய மோடி அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மத்திய அரசிடம், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய மருந்து தொகுப்பு கிடங்குகளிலிருந்து புனே, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களிலிருந்து தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வருகிறது.

அதன்படி இன்று மதியம் புனேவிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 50 பாா்சல்களில் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமானநிலையத்திற்கு வந்தன. அவற்றை சென்னை விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.

இதையடுத்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு 3.5 லட்சம் டோஸ் மருந்துகளையும், 2.5 லட்சம் டோஸ் மருந்துகளை சென்னை பெரியமேட்டில் உள்ள மற்றொரு மருந்து கிடங்கிற்கும் கொண்டு சென்றனர்.

இந்த மருந்துகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதோடு அடுத்த சில தினங்களில் மேலும் தடுப்பூசி மருந்துகள் சென்னை வரவுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Also Read: 600 ரூபாயாக உயர்த்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பு மருந்து : மோடி அரசின் கையாலாகாத தனத்தின் வெளிப்பாடா?