Tamilnadu

அரசு வழக்குகளில் ஆஜராவதற்காக 17 வழக்கறிஞர்கள் நியமனம் : தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மே 7ம் தேதி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பல்வேறு துறைகளில் அரசு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இவ்வகையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அரசு தொடர்புடைய முக்கிய வழக்குகளில் அவர் ஆஜராகிவந்த நிலையில், மற்ற வழக்குகளில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களே ஆஜராகி வந்தனர்.

இந்நிலையில், புதிய அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் நடைமுறைகளை முடிக்கும் வரை தற்காலிக அடிப்படையில், 17 வழக்கறிஞர்களை நியமிக்க தமிழக அரசிற்கு தலைமை வழக்கறிஞர் மே10ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். அதன் அடிப்படியில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 17 வழக்கறிஞர்களை நியமித்து தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராக பி.முத்துக்குமார், ஆர்.நீலகண்டன், சி. ஹர்ஷா ராஜ், எஸ். ஜான் ஜெ ராஜா சிங், ஏ. ஷப்னம் பானு ஆகியோரும், கிர்மினல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராக ஏ. தாமோதரன், ஆர். முனியப்பராஜ், ஜெ. சி. துரைராஜ், இ. ராஜ் திலக், எல். பாஸ்கரன், ஏ. கோபிநாத் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மதுரை கிளையில் சிவில் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன், பி. திலக் குமார், ஏ. கே. மாணிக்கம் ஆகியோரும், கிரிமினல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராக எஸ். ரவி, எம். முத்துமாணிக்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு வழக்கறிஞர் நியமன நடைமுறைகள் முடிந்து, புதியவர்கள் நியமிக்கப்படும் வரை இவர்கள் பொறுப்பில் இருப்பார்கள் என தமிழக அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “ஒன்றிணைவோம் வா... பேரிடர் காலத்தை வென்றிடுவோம் வா...!” : உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!