Tamilnadu

தீவிர தடுப்பு பணிகளில் தமிழக அமைச்சர்கள்... கொரோனா சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்து கள ஆய்வு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவச் சிகிச்சை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் முறை மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தனர்.

பின்னர் கொரோனா நோயாளிகளுக்குச் சிறப்புச் சிகிச்சை மையமாக உருவாக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரிக்குச் சென்று படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து மாவட்ட மருந்து குடோனில் ஆக்சிஜன் கொள்ளளவு மற்றும் கையிருப்பு ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணன் மாவட்ட வருவாய் அலுவலர், மருத்துவ அலுவலர்கள் என பலர் உடனிருந்தனர்.

Also Read: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது.. 4.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பிவைப்பு!