Tamilnadu
12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொற்று குறைந்தவுடன் நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு தொடர்பாக சென்னை தலைமைசெயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்தக் கூட்டத்தில் உயர் கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை பொறுப்பு வகிக்க கூடிய செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளான உசேன் மற்றும் வீரப்பெருமாள், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி உள்ளிட்டோரும், பேராசிரியர் கல்யாணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பெற்றோர் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்குவது மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது நடத்த முடியாத நிலை உள்ளதாகவும், ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வுகள் நடத்த வேண்டும் என பல தரப்பிலிருந்து கூறுவதால் தொற்று குறைந்தவுடன் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்வு நடத்துவதற்கு முன்னதாக முறையான கால அவகாசம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, அதனை தொடர்ந்து தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும், தேர்வு நடத்த வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளதால், எப்படி நடத்தவேண்டும் என முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, மாணவர்களுக்கு இந்த காலக்கட்டங்களில் அவர்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என ஆலோசித்து வருவதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!