Tamilnadu

#CovidUpdates தமிழகத்தில் இன்று மட்டும் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... ஒரே நாளில் 98 பேர் பலி!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 16,665 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,30,042 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 16,665 பேருக்கு கொரோனா உறுதியானது. தற்போதைய நிலையில் 1,10,308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,30,167 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15,114 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,06,033 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 98 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 47 பேர் தனியார் மருத்துவமனையிலும், 51 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,826 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 4,764 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,23,452 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,219 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 963 பேருக்கும், திருவள்ளூரில் 751 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 39 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

Also Read: திறமையற்ற திமிர் பிடித்த பாஜக அரசால் கிராமங்களுக்குள் ஊடுருவிய கொரோனா: மோடியை வரலாறு விடாது!