Tamilnadu

தமிழகத்தில் 11 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு.. இன்று 11,681 பேருக்கு தொற்று உறுதி.. 53 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலால் பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. முதன்முறையாக இன்று 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது தினசரி பாதிப்பு.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 11,611 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,25,059 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,10,304 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,11,66,398 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 3,750 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,94,073 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 947 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 715 பேருக்கும், திருவள்ளூரில் 529 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 39 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 7,071 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,27,440 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 84,361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 32 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,258 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: “தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுமா?” - மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!