Tamilnadu

"விளையாட்டு வினையானது: சிறுவன் காதுக்குள் மாட்டிக்கொண்ட துப்பாக்கி குண்டு”- காப்பாற்றிய அரசு மருத்துவமனை!

கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் கலைச்செல்வி. இவரது மகன் கிஷோர் (11). தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வரும் கிஷோர், பொம்மைத் துப்பாக்கியால் தானே தன் தலையில் விளையாட்டாகச் சுட்டுள்ளார்.

அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய சிறிய பிளாஸ்டிக் குண்டு, எதிர்பாராதவிதமாக கிஷோரின் காதுக்குள் மாட்டிக்கொண்டது. குண்டு காதில் அடைத்துக் கொண்டதால் கிஷோர் வலியால் துடித்துள்ளார்.

அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். குண்டை வெளியே எடுக்க முடியாத நிலையில் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பின்னர், கோவை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்தபோது, அவரது காதில் தோட்டா சிக்கியிருந்தது தெரியவந்தது.

அங்கு பணியில் இருந்த காது, மூக்கு, தொண்டை பிரிவு முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி நித்யா, சிறுவனின் காதில் இருந்த குண்டை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வெற்றிகரமாக வெளியே எடுத்தார்.

இதனால், சிறுவன் வலி நீங்கி நலமடைந்தார். அரசு மருத்துவமனையின் இத்தகைய செயல் அனைவரது பாராட்டுதலையும் பெற்றுள்ளது. மருத்துவமனையின் டீன் நிர்மலா, நித்யாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Also Read: “கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடம்.. கொள்ளையில் கவனம் செலுத்திய அரசு” - உதயநிதி ஸ்டாலின் சாடல்!