Tamilnadu

கள்ளக்குறிச்சி அருகே போலிஸ் வேடமிட்டு வழிப்பறி செய்த நபர் கைது... அவர் சொன்ன விநோத காரணம்..?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் போலிஸ் வேடமிட்டு வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் போலிஸ் வேடமணிந்து ஒருவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து போலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் போலிஸ் வேடத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் சென்னை அமைந்தகரையை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் கஜேந்திரன் என்பதும், அவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் தனியாக நின்று கொண்டிருக்கும் பொதுமக்களிடமும் தனியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடமும் போலிஸ் என கூறி பணத்தை பறித்துச் செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் முப்பத்தி இரண்டாயிரம் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

தனது மகள் திருமணம் செய்து முடித்த பின்பு கடன் தொல்லை அதிகமானதால், கடனை அடைப்பதற்காக வேறு வழி தெரியாமல் இதுபோன்ற மோசடி வேலையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: பேக்கரி உரிமையாளரை அடித்து இழுத்துச்சென்ற உதவி ஆய்வாளர் : தொடரும் போலிஸ் அராஜகம் - வைரலாகும் CCTV காட்சி!