Tamilnadu

மீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்! #CoronaUpdates

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த பல மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 5,989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,26,816 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 83,895 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,01,01,836 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 1,977 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,129 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக , செங்கல்பட்டு மாவட்டத்தில் 615 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 501 பேருக்கும், இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், கடலூர், காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் இன்று நூற்றுக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 37 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 1,952 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,76,257 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 37,673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 23 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 16 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,886 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: “கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசியை செலுத்திய சுகாதார ஊழியர்கள்” : உ.பியில் நடந்த அவலம்!