Tamilnadu

பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான ஆளுநரின் கடித நகலை வழங்கக்கோரி வழக்கு : அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ராஜீவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு வழக்கை விசாரித்து வரும் பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைக்காக காத்திருப்பதால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான சட்டமன்ற தீர்மானத்தின் மீது முடிவெடுப்பதில் தாமதமாவதாக தமிழக ஆளுநர் கடிதம் எழுதியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தமிழக அரசு கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் அனுப்பிய அந்தக் கடிதத்தின் நகலை தனக்கு வழங்க வேண்டும் என்று கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கை பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கோரி தொடர்ந்துள்ள பிரதான வழக்குடன் சேர்த்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Also Read: “பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தி.மு.க தலைவர் முதல்வரானால் மட்டுமே சாத்தியம்”: ஆர்.எஸ்.பாரதி பேச்சு!