Tamilnadu

கொரோனா பாதித்த தேர்தல் அதிகாரி.. தயங்கிய ஓட்டுனர் - தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்சியர்!

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்ட தேர்தல் பார்வையாளராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தரம்வீர் யாதவ் என்ற ஐ.பி.எஸ் அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமித்தது. இவர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து, தரம்வீர் யாதவுக்கு, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவர், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

பின்னர், தரம்வீர் யாதவ் மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அப்போது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகன ஓட்டுநர் தயக்கம் காட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உடனே சம்பவ இடத்திற்கு தனது சொந்த வாகனத்தை எடுத்து வந்து, கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு, ஐ.பி.எஸ் அதிகாரி தரம்வீர் யாதவை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, தரம்வீர் யாதவ் உடன் இருந்த அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Also Read: “மே இறுதி வரை கொரோனா தாக்கம் நீடிக்கும்” : தடுப்பு நடவடிக்கையில் ஆமை வேகத்தில் இருக்கும் மோடி அரசு !