Tamilnadu

சோலார் நிறுவன அதிகாரியை வெட்டிக் கொன்ற ‘மாஸ்க்’ கும்பல்... தென்காசி அருகே பயங்கரம்!

தென்காசி மாவட்டம், சுப்பையாபுரம் பகுதியில் என்.எல்.சிக்கு சொந்தமான சோலார் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிறுவனத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தியாகராஜன், கயத்தாறில் இயங்கி வரும் என்.எல்சி நிறுவனத்துக்கு சென்றுள்ளார். அப்போது தியாகராஜனை தேடி மாஸ்க் அணிந்த மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர். அப்போது காவலாளி அவர் வெளியே சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தியாகராஜன் மாலை அலுவலத்திற்கு வந்த போது, திடீரென உள்ளே புகுந்து ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே தியாகராஜன் பரிதாபமாக இறந்தார். இதைத் தடுக்க முயன்ற உதவியாளர் கிருஷ்ணனின் தலையிலும் வெட்டிவிட்டு மர்ம கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலிஸார் தியாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “விஜயபாஸ்கர் வெற்றி பெற வாய்ப்பில்லை” : கருத்துக்கணிப்பு நடத்தியவர்களை தாக்கிய அ.தி.மு.க அடியாட்கள்!